Translate

Saturday, March 28, 2009

குழந்தைகளுக்கு இஸ்லாத்தை சொல்லி கொடுப்போம் - பாகம் 2

கேள்வி : 01 இறைவன் நம்மை ஏன் படைத்தான்?
அவனை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிவதற்காகவுமே நம்மைப் படைத்தான்.  

கேள்வி : 02 இபாதா - வணங்குதல் என்றால் என்ன? 
இறைவன் விரும்புகின்ற, அன்பு செலுத்துகின்ற, அவன் நமக்குக் கட்டளையிட்டவாறு செயல்படுகின்ற அனைத்தும் நாம் அல்லாஹ்வுக்குச் செலுத்துகின்ற வணக்கமாகும். உதாரணம் : தொழுகை, நோன்பு, நல்லொழுக்கம், ஏழைகளுக்கு உதவுதல், நல்ல முஸ்லிமாக வாழ்வது .. இன்னும் பல.  

கேள்வி : 03 யாருக்கு நம்முடைய வணக்கத்தைச் செலுத்த வேண்டும்? 
அல்லாஹ்வுக்கு மட்டுமே நம்முடைய வணகத்தை உரித்தாக்க வேண்டும்.  

கேள்வி : 04 உன்னுடைய மார்க்கம் அதாவது நீ பின்பற்றுகின்ற மார்க்கம் எது? 
தீனுல் இஸ்லாம் தான் நான் பின்பற்றுகின்ற மார்க்கமாகும்.  

கேள்வி : 05 இஸ்லாம் என்றால் (அடிப்படைக் கொள்கை) என்ன? 
அல்லாஹ் ஒருவனே!
  • அவனுக்கு இணை துணை ஏதுமில்லை!
  • அவன் அனைத்தையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான்.
  • அவன் வானத்தில் உள்ள அர்ஷில் அமர்ந்திருக்கின்றான்.
  • அவனைப் போல எவருமில்லை.
  • அவன் தான் மழையை இறக்கி வைத்தான்
  • உணவையும் படைத்தான்.
  • அனைத்தையும் பாதுகாப்பவனும் அவனே!
  • இத்தகையவனான அல்லாஹ்வைத் தனித்துவமாக அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
  • அவன் வெறுக்கின்ற எதனையும், தடுத்திருக்கின்ற எதனையும் நாம் செய்யக் கூடாது.
 
கேள்வி : 06 மனிதர்கள் பிறப்பது இஸ்லாத்தில் தானா? 
ஆம்! பிறக்கின்ற அனைத்துக் குழந்தைகளும் முஸ்லிம்களாகத் தான் பிறக்கின்றன.  

கேள்வி : 07 சில மனிதர்களை நாம் முஸ்லிம் அல்லாதவர்கள் என்கிறோம்.. ஏன்? 
இறைவனல்லாதவற்றை வணங்கும்படி ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து விட்டதால், அவர்கள் இறைவனல்லாதவற்றை வணங்குவதால் அவர்களை முஸ்லிம்களல்ல என்கிறோம்.  

கேள்வி : 08 மக்கள் இஸ்லாத்தில் இணைவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் என்ன? 
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - வணக்கதிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனுடைய திருத்தூதராக இருக்கின்றார்கள் என்று மொழிந்து ஏற்றுக் கொள்வது தான் இஸ்லாத்தில் இணைய விரும்புகின்றவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவையாகும்.  

கேள்வி : 09 மனித குலத்திற்கு அருட்கொடையாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதரின் பெயரென்ன? 
அப்துல்லா என்பவரது மகனாகிய, முஹம்மது (ஸல்) அவர்கள் தான் மனித குலத்திற்கு அருட்கொடையாகவும், வழிகாட்டவும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட தூதராவார்.  
கேள்வி : 10 இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்ததன் நோக்கம் என்ன? 
மக்களுக்கு இஸ்லாத்தின் தூதை எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காக!  

கேள்வி : 11 முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களை எதன் பால் அழைத்தார்கள்? அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற அழைப்பை மக்களுக்கு விடுத்ததோடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதனின்றும் மக்களை தவிர்ந்திருக்கும்படியும் அறிவுறுத்தினார்கள்.  

கேள்வி : 12 இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டு, அவர் கொண்டு வந்த தூதை நாம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமா?
  • ஆம்! ஓவ்வொரு முஸ்லிமின் மீதும் இது அடிப்படைக் கடமையாகும்.
  • இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டு, அவர் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையும் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீது உள்ள அடிப்படைக் கடமையாகும்.
  • அவரை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அவரைப் பின்பற்றவும் வேண்டும்.

No comments: